ஈழத் தமிழர்களுக்காக விஜய டி.ராஜேந்தர் புது இயக்கம் தொடக்கம்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட தமிழ் இன பாதுகாப்பு முன்னணி என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் விஜய டி.ராஜேந்தர்.
லட்சிய திமுக என்ற கட்சியை நடத்தி வருகிறார் ராஜேந்தர். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காகப் போராட புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இந்த அமைப்புக்கு தமிழ் இன பாதுகாப்பு முன்னணி என்று பெயர் சூட்டியுள்ளார். தலைவராக ராஜேந்தர் செயல்படுவார்.
கவிஞர் புலமைப்பித்தன், நடிகர் மன்சூர் அலிகான், வேலுச்சாமி, சக்திவேல் ஆகியோர் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜேந்தர் கூறுகையில்,
தமழ் எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த புதிய இயக்கத்தை உருவாக்கி உள்ளோம். இலங்கையில் அழிக்கப்படும் தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் ஈழம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இலங்கை தமிழர்களை காப்பாற்றுவது போல் பதவியை தக்கவைக்க சிலர் நாடகம் ஆடுகிறார்கள். தமிழர்கள் நலனை பகடைக்காய் ஆக்கி கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமாரின் மரண சாசனம் தமிழ் இன உணர்வை தட்டி எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இலங்கையில் தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சட்டசபையில் தீர்மானம் போட்டு அனுப்பப்பட்டது. மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதனால் என்ன பயன். காங்கிரசின் அடிமை சங்கிலியில் சில கட்சிகள் பிணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இனத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. துரோகமாகவும், விரோதமாகவும் நடக்கின்றன.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகு கூட்டணி என்ற உணர்வுடன் தமிழ் இன உணர்வுகளை தள்ளி வைத்து விடுவார்கள். இதுபற்றி தமிழக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்வோம் என்றார்.
ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம், இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை மற்றும் அதற்கு ஒரு துணை அமைப்பு என மூன்று பிரிவாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நான்காவதாக ராஜேந்தரும் ஒரு அமைப்பு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.