மதுவுக்கு மல்லுக்கட்டு-பெண் வியாபாரி கைது
கோவை: வீட்டில் சட்டவிரோதமாக மது விற்ற பெண்ணிடம் கடனுக்கு மது கேட்ட வாலிபர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இதையடுத்து பெண் மது வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உளள கண்ணார்புதூரை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவர் அரசு மதுக்கடைகளில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செயது வந்துள்ளார்.
சகாயமேரி வீட்டில் 'சரக்கு' கிடைக்கும் விவரத்தை அறிந்து கொண்ட செல்வன் (27) என்ற குடிமகன் நேற்று அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சகாயமேரியிடம் கடனுக்கு மதுபானம் தருமாறு செல்வன் கேட்டுள்ளார். ஆனால் சகாயமேரி கடனுக்கு தரமறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
மது கிடைக்காத ஆத்திரத்தில் செல்வன், கடனுக்கு மது தராவிட்டால் திருட்டுத்தனமாக மது விற்பதை போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சகாயமேரி, மகேஷ் குமார் (27) என்பவருடன் சேர்ந்து செல்வனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செல்வனின் மனைவி புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, ஏட்டு பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்வனை தாக்கிய சகாயமேரி, மகேஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications