ஆம்ஸ்டர்டாம்: துருக்கி விமானம் நொறுங்கி 9 பேர் பலி
நேற்று காலை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அடாடர்க் விமான நிலையத்தில் இருந்து போயிங் 737 விமானம் 135 பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாமை சென்றது.
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தை நெருங்கியவுடன் விமானம் தள்ளாட தொடங்கியது. வானிலை நன்றாக இருந்த போதும் விமானம் ஓடுதளத்துக்கு அரை கிலோ மீட்டர் முன்னதாகவே தரையிறங்கியது.
தரையில் மோதியவுடன் விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து சிதறியது. என்ஜின்கள் தூக்கி எறியப்பட்டன.
இதில் விமானிகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் 86 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த சமயத்தில் விமானத்தில் எரிபொருள் மிகவும் குறைவாக இருந்ததால் வெடிவிபத்து ஏற்படவில்லை. எரிபொருள் இருந்திருந்தால் விமானம் தீப்பற்றி எரிந்திருக்கும், பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும் எனத் தெரிகிறது.
விபத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்தையடுத்து ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இது குறித்து உயிர் தப்பிய பயணி ஹசின் சுமர் என்பவர் கூறுகையில், என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில பயணிகள் பயத்தில் அலறினர். இதெல்லாம் 5 முதல் 10 வினாடிகள் வரை தான் நடந்திருக்கும். அதற்குள் விமானம் நொறுங்கிவிட்டது என்றார்.