ரெட்டிக்கு எதிராக போராட்டம்- நாயுடு கைது
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஹைதராபாத்தில் போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவற்றுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார் நாயுடு.
இந்த கூட்டணியின் சார்பில் ராஜசேகர ரெட்டி மீதான ஊழல்களை விசாரிக்கக் கோரி ஹைதராபாத்தில் பிரமாண்ட சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஹைதராபாத் நகரின் பஷீராபாத் பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராகவலு, நாராயணா, நரசிம்ம் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.