மதுரையில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் பலி
மதுரை: மதுரை பெருங்குடி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி பகவதி (35) தனது அண்ணன் மனைவி முத்துமாரி (30) மற்றும் அவரது குழந்தைகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வேப்பங்குளத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி கும்பிட்டபின் அனைவரும் ஷேர் ஆட்டோவில் வில்லாபுரத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஆட்டோ அவனியாபுரத்தை அடுத்த பர்மா காலனி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது, மதுரையில் இருந்து பெருங்குடி நோக்கி சென்ற லாரி, முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ஷேர் ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பகவதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயமாரி உயிரிழந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முத்துமாரி, அவரது 9 மாத குழந்தை முத்து அரியநாச்சி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி:
இதற்கிடையே, நெல்லை அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயு்ள்ள பள்ளமடையை சேர்ந்த மாடசாமி மகன் செல்லத்துரை. சுப்பிரமணியன் மகன் முத்துசாமி, அக்கினி மாடன் மகன் மகேந்திரன், இவர்கள் பள்ளமடை அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மதிய உணவு இடைவெளியி்ன்போது 3 பேரும் வெளியே வந்தனர். அதன்பிறகு அவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை.
மாலையில் பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் அவர்கள் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றொர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் குளக்கரையில் 3 சீருடைகள் கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்த சிலர் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அனைவரும் குளத்திற்கு சென்றனர். அப்போது செல்லத்துரை உள்பட 3 பேரின் உடல்கள் குளத்தில் மிதப்பதை பார்த்து கதறி அழுதனர். மதிய உணவு இடைவெளியின்போது மூவரும் குளிப்பதற்காக குளத்திற்கு வந்துள்ளனர். அழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீச்சல் தெரியாததால் 3 சிறுவர்களும் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது.
3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மானுர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் குளத்தில் மூழ்கி இறந்ததால் பள்ளமடை கிராமமே சோகத்தில் மூழ்கியது.