வக்கீல்கள் பணிக்கு திரும்புவதே முறையாகும்-கருணாநிதி
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சில போலீஸ் அதிகாரிகளை வேறு ஊர்களுக்கு மாற்றியாகிவிட்டது. இந் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2ம் தேதி நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்புவதே முறையாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் நடத்திய தடியடி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்க்ள் தங்களது நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனாலும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் நீதிமன்றப் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வக்கீல்கள் தொடங்கி, பிறகு அந்த நீதிமன்றத்திற்குள் சுப்பிரமணிய சாமி மீது வக்கீல்கள் முட்டை வீசியதாக வழக்கு, அந்த வழக்கின் விஸ்வரூபமாக போலீசார்-வக்கீல்கள் மோதல் என்று வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றுள்ளது.
திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை- அதை உச்சநீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில போலீஸ் அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையில் இருந்து இந்த அரசு வேறு ஊர்களுக்கு மாற்றியாகிவிட்டது.
இன்னும் என்ன?. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிஷனின் அறிவுரையை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வக்கீல்கள் மட்டும் அதில் பொறுமை காட்டலாகாதா?.
குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும் இருசாரரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை எல்லாம் அரசு செயல்படுத்த தயார் என்கிறபோது; அதே உச்சநீதிமன்ற கருத்தை ஏற்று வக்கீல்கள் அனைவரும் மார்ச் 2ம் தேதி நீதிமன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும்.
இல்லையேல், இது இலங்கை தமிழர் பிரச்சினைக்கான போராட்டமல்ல; இங்குள்ள திமுக ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதானே உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications