பிளஸ்டூ தேர்வு நாளை தொடங்குகிறது - பலத்த பாதுகாப்பு
சென்னை: பிளஸ்டூ எனப்படும் மேல்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வுகள் நாளை முதல் தொடங்குகின்றன. தேர்வுகளை முறையாக நடத்த பறக்கும் படைகளுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6.80 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் 1,738 மையங்களில் தேர்வு நடக்கிறது.
3000 பறக்கும் படைகள்
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி' அடிப்பதை தடுக்கும் வகையில் 3 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் தலைமையில் இயங்கும் பறக்கும் படையினர் தினசரி ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
பறக்கும் படையினர் தவிர மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படையினர் தொழிற்கல்வி சேர்க்கைக்கு முக்கிய பாடங்களாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட தேர்வு நாட்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் விரிவாக செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 47,857 மாணவ-மாணவிகள் 135 மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். 20 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு பணியில் 3,160 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி தெரிவித்தார்.