மீண்டும் 3வது அணி-அதிமுகவும் இணைந்தது
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்வதில் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடா இன்று பெங்களூரில் வெளியிட்டார்.
இந்த மூன்றாவது அணியில் அதிமுக, தெலுங்குதேசம், மதசார்பற்ற ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆர்எஸ்பி, பார்வர்ட் பிளாக் ஆகிய 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாவது அணியின் முதல் பேரணி வரும் 12ம் தேதி பெங்களூரில் நடக்கவிருக்கிறது.
அதிமுக அடங்கிய மூன்றாவது அணி அமைவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின் போது அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணி அமைத்து. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக, பாஜக பக்கம் போய் பைரான் சிங் ஷெகாவத்தை ஆதரிக்க மூன்றாவது அணி கலகலத்து போனது.
இதையடுத்து அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்தன. அதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாளைக்கோ...
காங்கிரஸ், சமாஜ்வாடி பேச்சு...
மற்றொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக செல்வதாக தெரிகிறது.
காங்கிரஸ் உ.பியில் குறைந்தது 25 தொகுதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால், 12 இடங்கள் தருவதாக ஆரம்பித்த சமாஜ்வாடி தற்போது 17 தொகுதிகள் வரை வந்துள்ளது.
இந் நிலையில் இன்று சோனியாவை சந்திக்கிறார் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங். அதில் இடப் பிகிர்வு இறுதியாகும் என்று தெரிகிறது.