கார்த்திக் கட்சி பிரமுகர் மீது மோசடி வழக்கு
நெல்லை: ஆந்திர தொழிலதிபருக்கு கடன் வாங்கி தருவதாகக் கூறி கமிஷன் பெற்று அதை திருப்பி கொடுக்க மறுத்த வழக்கில் நடிகர் கார்த்திக் கட்சியின் பொது செயலாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ்வர ரெட்டி என்பவர் நெல்லை சிஎன் கிராமத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் பொது செயலாளர் சேதுராமபாண்டியன் மற்றும் எஸ்ஆர் தேவர் ஆகியோரிடம் தொழில் அபிவிருத்திக்காக ரூ.100 கோடி கடன் கேட்டு கமிஷன் தொகையாக ரூ.2 கோடி கொடுத்தார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட சேதுராம பாண்டியன் உள்ளிட்டோர் கடன் வாங்கி கொடுக்காததை அடுத்து தான் கொடுத்த கமிஷன் பணத்தை திருப்பி கேட்டார். அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றினர்.
இதையடுத்து ஆந்திர தொழிலதிபர் நெல்லை மாநகர குற்றபிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி சேதுராம பாண்டியன், அவரது உதவியாளர் ராஜேஷ், பேரன் மூர்த்தி, எஸ்ஆர் தேவர் மற்றும் சேலத்தை சேர்ந்த புரோக்கர் கோவிந்தசாமி ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ரூ. 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சேதுராமபாண்டியன் தவிர மற்றவர்கள் ஜாமினில் வெளி வந்துள்ளனர். சேதுராமபாண்டியன் மீது குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சில வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுசூதனன் பாளையங்கோட்டை சிறை சென்று சேதுராமபாண்டியனிடம் விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications