பொய் வழக்கு போடும் திமுக-சரத்குமார் கடிதம்!
கோவை: சமத்துவ மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு போட திமுகவினர் தூண்டி வருவதாக தமிழக போலீஸ் டிஜிபிக்கு அக்கட்சி தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கோவை மாவட்டம் வால்பாறையில் 16-வது வார்டுக்கு உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சற்குணம், திமுக சார்பில் சின்னச்சாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 26ம் தேதி நள்ளிரவில் குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எங்களது கட்சினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த கட்சியினர், வேட்பாளர் சற்குணம், நகர நிர்வாகிகள் மதி, செபஸ்டியன் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பணம் கொடுப்பவர்களை தடுக்க சென்றுள்ளனர். அதற்குள் பணம் கொடுத்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
உண்மை இப்படி இருக்க அதிகாலை 1.30 மணியளவில் திமுகவினரை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தாக்கியதாக கூறி அவர்களே சட்டையை கிழித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளை வற்புறுத்தி சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய கோரி வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் காவல் நிலையத்தில் முடக்கி வைத்து உள்ளனர்.
எனவே, உடனடியாக தாங்கள் தலையிட்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். வாக்காளருக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என கடிதத்தில் சரத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications