காங். நெருக்குதலை மீறி திமுக கூட்டணியில் திருமா
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிப்பதாகவும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவும் அக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ்- விடுதலைச் சிறுத்தைகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களை விடுதலைச் சிறுத்தைகள் சூறையாடினர்.
இதையடுத்து திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது. கூட்டணியிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்று கூறி் வருகிறது.
அவ்வபோது திருமாவளவனை கண்டித்தாலும் கூட கூட்டணியில் இருந்து அவரை திமுக வெளியேற்றவில்லை.
சமீபத்தில் மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த திருமாவளவன், காங்கிரஸ் உங்களை அதிகம் நெருக்கினால், நீ்ங்கள் சொன்னால் நான் கூட்டணிலிருந்து விலகி நிற்கத் தயார். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் அதிமுக பக்கம் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, தம்பி உன்னை கூட்டணியை விட்டு வெளியேற்றச் சொல்லி காங்கிரஸ் நெருக்கினால்.. விலக்க மாட்டேன் என்று காங்கிரஸை நான் நெருக்குவேன் என்று பதிலளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரம் நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறது.
இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கியுள்ளது. இன்று முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார் காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்.
இந் நிலையில் திருமாவளவன் கூறுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறவில்லை. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று உருவானதோ, அன்றில் இருந்தே நாங்கள் அங்கம் வகிக்கிறோம்.
திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகவில்லை. அதில் தொடர்ந்து நீடிக்கிறோம். எங்களை கூட்டணியில் இருந்து விலக்கி விட்டதாக திமுக சொல்லவில்லை.
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்கவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். சிதம்பரம் மற்றும் இன்னொரு தொகுதியை திருமா கேட்பார் என்று தெரிகிறது.
காங்கிரசையும் மீறி கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை திமுக அனுமதிக்கும் என்றே தெரிகிறது. மேலும் திருமாவளவனுக்கு சிதம்பரம் தொகுதியை திமுக ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நல்ல பலம் உண்டு. இங்கு திருமாவே கூட போட்டியிடலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications