சந்தையில் மூன்றாண்டு இல்லாத சரிவு!
மும்பை: கடந்த மூன்றாண்டுகளில் காணாத பெரும் சரிவைச் சந்தித்துள்ளது பங்குச் சந்தை.
சென்செக்ஸில் இன்றைய வர்த்தக நேர முடிவின்படி 179.79 புள்ளிகள் சரிந்துவிட்டன. இன்று ஒரு கட்டத்தில் 8390 புள்ளிகளுக்கும் கீழ் சென்செக்ஸ் இறங்கியது. கடைசியாக பங்குவிலை இந்த அளவு சரிந்தது 2005-ல்தான்.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதே இந்த மோசமான வர்த்தகத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 13 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
நிப்டியிலும் எதிர்மறையான போக்கே நிலவியது. 52 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது நிப்டி.
வர்த்தக நேர முடிவில் சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 8427.29 (-179.79), நிப்டி: 2622.40 (-52.20).
உலகப் பொருளாதார மந்தத்தின் இரண்டாம் கட்டம் இது என்றும், இந்த காலகட்டத்தில்தான் பெரும் சோதனைகள் காத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய நாளில் கைமாற்றப்பட்ட அத்தனைப் பங்குகளுமே கடும் நஷ்டத்தில் கைமாறின.