தமிழகத்தில் 13 மக்களவைத் தொகுதிகள் மாற்றம்
தமிழகத்தில் நாடாளூமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 13 தொகுதிகளின் பெயர்கள் நீக்கிவிட்டு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்துள்ள தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பதிலாக 13 புதிய தொகுதிகளை உருவாக்கியுள்ளது.
நீக்கப்பட்ட தொகுதிகள்:
இதன்படி கடந்த தேர்தலில் இடம்பெற்ற செங்கல்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, திண்டிவனம், ராசிபுரம், திருச்செங்கோடு, கோபிசெட்டிபாளையம், பழனி, பெரியகுளம், புதுக்கோட்டை, சிவகாசி, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் இனி இருக்காது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள்:
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகவே இருக்கும்.
கடந்த தேர்தலில் தனி தொகுதிகளாக இருந்த சில தொகுதிகள் தற்போது பொது தொகுதியாகவும், பொது தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களால் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகள் காணாமல் போய்விட்டன. இதனால் இவர்கள் தொகுதி மாற வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இளங்கோவன் (கோபிசெட்டிபாளையம்), திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி (திருச்செந்தூர்), சுப்புலட்சும் ஜெகதீசன் (திருச்செங்கோடு), மதிமுக செஞ்சி ராமச்சந்திரன் (வந்தவாசி) ஆகியோரின் தொகுதிகள் இப்போது இல்லை.
இதற்கிடையே சில மத்திய அமைச்சர்கள் தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
தொடர்ந்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்த மத்திய அமைச்சர் டிஆர் பாலு, இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.