கூட்டணி-விஜய்காந்துக்கு காங் மறைமுக அழைப்பு
சென்னை: கூட்டணியி்ல் சேர வருமாறு தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு காங்கிரஸ் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாடு, திமுகவிடம் காங்கிரஸ் போட்டியிட கோர வேண்டிய தொகுதிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.
அப்போது மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் உடனிருந்தனர்.
இச் சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ஆசாத் கோரியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஆசாத்திடம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கூட்டணியில் சேர்ப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஒத்த கருத்துள்ள கட்சிகள், எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று பதிலளித்தார்.
காங்கிரஸ் கூட்டணியில் திமுக மிகவும் வலிமை வாய்ந்த கட்சியாக உள்ளது. திமுக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக விளங்கி வருகிறது. இந்தக் கூட்டணி வருங்காலத்திலும் தொடரும் என்றார்.
தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச, காங்கிரஸ் மற்றும் திமுகவில் தனித் தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தும்.
ஒத்த கருத்துள்ள கட்சிகளை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்றார்.
விஜய்காந்துக்கும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆர்வாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் சேராமல், காங்கிரசுடன் மட்டும் அவர் தொகுதி உடன்பாடு செய்யலாம் என்று கருதப்படுகிறது.
அவரை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் காங்கிரஸ் கடந்த பல மாதங்களாகவே தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறதா என்று மத்திய இணையமைச்சர் இளங்கோவனிடம் கேட்டதற்கு,
முன்பு கூட ரஜினிகாந்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம். அது நடக்காமல் போய்விட்டது. மத சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் வற்புறுத்தியுள்ளார்களா என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை குலாம் நபி ஆசாத்திடமே கேளுங்கள் என்றார்.
5ம் தேதி விஜய்காந்த் ஆலோசனை:
இந் நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என விஜய்காந்தை அவரது கட்சியினரும் நெருக்கி வருகின்றனர்.
இப்போது மரியாதை படப்பிடிப்புக்காக விஜயகாந்த் பாங்காக் சென்றுள்ளார். 5ம் தேதி சென்னை திரும்பும் அவர் நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து பேசவுள்ளார்.
இது குறித்து தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், விஜயகாந்த் 5ம் தேதி சென்னை வந்த பின் கூட்டணி மற்றும் தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications