திமுக வக்கீல்களை தடுத்த வக்கீல்கள் - விழுப்புரத்தில் மோதல்
விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டுக்கு ஆஜராக வந்த திமுகவைச் சேர்ந்த வக்கீல்களுக்கும், பிற வக்கீல்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர்.
உயர்நீதிமன்ற மோதலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டுகளைப் புறக்கணித்து விட்டு உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் திமுக வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போக வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் உடனடியாக இன்னொரு அறிவிப்பை திமுக வெளியிட்டது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம் என திமுக வக்கீல்கள் அணிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விழுப்புரத்தில் அரசு வக்கீல்கள் டி.எஸ்.சுப்பிரமணியன், நாகராஜன், முன்னாள் அரசு வக்கீல் எம்.ஆர்.ஷெரீப், மற்றும் வக்கீல்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆதிசங்கர், காணை ஒன்றியக்குழு தலைவர் கல்பட்டு ராஜா,கோதண்ட பாணி, பன்னீர்செல்வம், எம்.எஸ். நடராஜன், முனவர் ஷெரீப், ஏழுமலை உள்பட 10 வக்கீல்கள் நேற்று காலை கோர்ட்டில் ஆஜராவதற்காக சென்றனர்.
அப்போது வக்கீல்கள் சங்க தலைவர்கள் தமிழ்ச் செல்வன், துரைமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் 30 வக்கீல்கள் சேர்ந்து, வக்கீல்களின் ஒற்றுமையை ஏன் சீர்குலைக்கின்றீர்கள் என கேட்டனர்.
எங்கள் விருப்பப்படி கோர்ட்டிற்கு செல்கின்றோம் என்று அவர்கள் கூறி மாவட்ட முதன்மை நீதிபதி கோர்ட்டிற்கு (சேம்பர்) சென்று அமர்ந்தனர்.
அப்போது திடீரென்று தி.மு.க. வக்கீல்கள் ஆதிசங்கர், கல்பட்டுராஜா, எம்.எஸ்.நடராஜன் ஆகியோரை மற்ற வக்கீல்கள் தாக்கினர். அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மகேந்திரன் என்பவரும் தாக்கப்பட்டார்.
இந்த மோதலில் கல்பட்டு ராஜா, மகேந்திரன் காயமடைந்தனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.