துபாய் வழியே கொழும்பு திரும்பும் இலங்கை அணி
லாகூர்: லாகூர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இலங்கை அணியினர் இன்று துபாய் வழியாக கொழும்பு திரும்புகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 வீரர்களும் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கடாபி ஸ்டேடியத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அணியினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு விமான நிலையம் கொண்டு செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அனைத்து வீரர்களும் உடனடியாக துபாய் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கொழும்பு திரும்புவார்கள்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொகனா, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடிந்து விட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
விளையாட்டு வீரர்களை குறி வைத்து தாக்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தீவிரவாதிகளின் இந்தப் போக்கு மாற வேண்டும்.
இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் சீரியஸானவை அல்ல என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சொத்து. நாட்டின் பெருமையான அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
லாகூர் சம்பவத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரிய செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்த வீர்ரகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். அவர்களது குடும்பத்தினருக்கும், இலங்கை மக்களுக்கும் எங்களது ஆறுதல்களைக் கூறிக் கொள்கிறோம்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லான்ட் கூறுகையில், இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. வீரர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நண்பர்கள். அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட்டும், எங்களுக்கு முக்கியமானதுதான். இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சிலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் டுவென்டி 20 போட்டிகளின் எதிர்காலம் குறித்து இப்போதே கூற முடியாது என்றார்.
உலகக் கோப்பை - பாகிஸ்தானில் நடக்காது?
இதற்கிடையே 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலைத் தொடர்ந்து இந்த போட்டித் திட்டத்திலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தவிர்த்து மற்ற மூன்று நாடுகள் மட்டும் இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications