மின் தடைக்கு எதிராக மனித சங்கிலி-கிருஷ்ணசாமி
கடையநல்லூர்: மின் தடையை கண்டித்து வரும் 15ம் தேதி புதிய தமிழகம் சார்பில மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கடையநல்லூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருக வலியுறுத்தி மாவட்ட மாநாடு நடந்தது. கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசுகையில்,
தொழில் வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30ம் தேதி திருச்சியில் புதிய தமிழகம் சார்பில் முதல் மாநாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து விருதுநகர், மதுரை, கடையநல்லூரில் நடத்தப்படுகிறது.
இது தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தக்கூடிய மாநாடு அல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த மற்றும் ஆளும் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தென் தமிழக வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை.
மின்தடை நீக்கிட வரும் 15ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்காக மனித சங்கிலி போராட்டம் புதிய தமிழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது. தமிழகத்தில் அரசியல் நோக்கம் கொண்ட குரல்தான் இலங்கை தமிழர் பிரச்சனையில் காணப்படுகிறது.
அதனால்தான் உலக நாடுகள் ஆதரவு குரல் கொடுக்க முன்வரவில்லை. இப்படி இருந்தால் தமிழர்களை உலக நாடுகள் எப்படி ஆதரிக்கும். எங்கு மனித உரி்மை மீறல் நடந்தாலும் புதிய தமிழகம் தனித்து குரல் கொடுக்கும். தென் தமிழகத்தில் தொழி்ல் வளர்ச்சியை பெருக்கிட வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications