அதிமுகவிடம் 10 இடங்கள் கேட்கும் கம்யூனிஸ்டுகள்
சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 5 இடங்களைக் கேட்பதாகத் தெரிகிறது.
கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, நாகர்கோவிலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை, தென்காசி தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றன.
இந் நிலையில் அதிமுக கூட்டணிக்கு மாறியுள்ள இடது சாரிக் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் இடத்தில் போட்டியிட நினைக்கின்றன.
வரும் தேர்தலில் மேற்கு வங்கம், கேரளாவில் இந்தக் கட்சிகளுக்கு கடும் சரிவு காத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில் தமிழகத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால் தேசிய அளவில் பலத்தைக் காட்ட பெரும் உதவியாக இருக்கும் என அக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் கருதுகின்றனர்.
இதனால் அதிமுகவிடம் தலா 5 தொகுதிகள் கேட்டு 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன. தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளின் பட்டியலையும் அவை தயாரித்துள்ளன.
சென்னையில் நேற்று நடந்த இந்த இரு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, கோவை, சிதம்பரம் ஆகிய தொகுதிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாகப்பட்டிணம் தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், வட சென்னை ஆகிய தொகுதிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை அதிமுக தேர்தல் பணிக் குழுவினரிடம் இடதுசாரித் தலைவர்கள் வழங்கவுள்ளனர். இதையடுத்து இடதுசாரிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்வார்.
அவர்களுக்கு தலா 3 இடங்கள் தரப்படலாம் என்று தெரிகிறது. இந்த இடங்கள் இடதுசாரிகள் தரும் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
இதற்கிடையே அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அமைத்தது.
4 இடம் கேட்கும் இ.யூ. முஸ்லிம் லீக்:
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிப்போம் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநிலத் தலைவர் எம்.ஜி.தாவூத்மியா கான் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் மத்திய சென்னை, ராமநாதபுரம், வேலூர், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்கப்படும் என்றார்.
இந்தக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.