அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு - காதல் தோல்வியால் பரிதாபம்
ராமநாதபுரம்: காதல் தோல்வி காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈழ போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா என்பவரின் மகள் நிஷாந்தினி (24).
கடந்த மாதம் யோகராஜா தனது குடும்பத்தினருடன் அகதியாக தமிழகம் வந்தார். அவர்களது குடும்பத்துடன் இலங்கையை சேர்ந்த வசீகரன் என்ற வாலிபரும் வந்திருக்கிறார்.
அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே முகாமில் இருந்ததை அடுத்து நிஷாந்தினியும், வசிகரனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களுக்குள் காதல் பயிரை விறுவிறுவென வளர்த்துள்ளது.
காதலர்கள் இருவரும் ஜோடியாக முகாமை விட்டு வெளியேறி பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வசீகரன் திடீரென்று காணாமல் போனார். அவர் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்றுவி்ட்டதாக தெரிகிறது.
காதலனை பிரிந்த வேதனையில் இருந்த நிஷாந்தினி அகதிகள் முகாமில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.