தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி?
சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடலாம் என்று தெரிகிறது.
நாளை நடக்கும் தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும் தனது மச்சானுமான சுதீஷின் இல்லத் திறப்பு விழாவில் கூட்டணி குறித்த தனது நிலையை கட்சியின் தலைவர் விஜய்காந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ், பாஜக ஆகியவை தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால், காங்கிரசுடன் திமுக இருப்பதால் கூட்டணி சேர விஜய்காந்த் தயக்கம் காட்டி வருகிறார்.
பாஜகவுடன் கூட்டணிக்கே தயாரில்லை என்பதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால், காங்கிரஸ் விஷயத்தில் இன்னும் அவரால் முடிவெடுக்க முடியவில்லை.
திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம், எங்களுடன் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. அப்படி கூட்டு சேர்ந்தால் திமுகவிடம் கணிசமான தொகுதிகளைப் பெற்று அதில் ஒரு பகுதியை தேமுதிகவுக்கு விட்டுத் தரத் தயார் என்றும் விஜய்காந்திடம் காங்கிரஸ் கூறி வருகிறது.
ஆனால், இது மக்களிடையே எவ்வளவு தூரம் எடுபடும் என்பது தெரியாததாலும் தேமுதிகவை திமுக கூட்டணிக் கட்சி என்றே குறிப்பிடுவார்கள் என்பதாலும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் விஜய்காந்த்.
ஆனால், தனித்துப் போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது என்பதை அவரது கட்சியினரில் பெரும்பாலானவர்களே நம்புகின்றனர். ஆனால் தேமுதிக தலைவர்களில் சிலர் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்ட வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே தேமுதிகவின் குறிக்கோள். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவரிடம் சில நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் குழ்பபம் மேலும் அதிகமாகியுள்ளது.
மரியாதை பட சூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்த விஜய்காந்த் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளனர். அவர்களிடம் விஜய்காந்த் பிடிகொடுக்கவில்லை.
நேற்று சென்னையில் தனது கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய்காந்த் இந்த விவரங்களை தீவிரவாகவே விவாதித்துள்ளார்.
இந் நிலையில் நாளை நடக்கும் சுதீஷின் இல்லத் திறப்பு விழாவில் கூட்டணி குறித்து விஜய்காந்த் தனது நிலையை தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் தனித்து போட்டியிடுவதற்கான அறிவிப்பையே அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.