லாகூர் தாக்குதல்: தீவீரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ 1 கோடி பரிசு
இஸ்லாமாபாத்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி பரிசு வழங்கப்படும் என் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக துபாய் வழியாக கொழும்பு திரும்பினர்.
இந்த தாக்குதலில் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், இதை இந்தியா மறுத்துவிட்டது. பொறுப்பற்ற தனமாக பேசுகிறது பாகிஸ்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சாடியிருந்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 1 கோடி சன்மானம் கொடுக்கப்படும் என லாகூர் போலீஸ் தலைமை அதிகாரி ஹபிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குற்றவாளிகளின் வரைபடத்தை தயாரித்து வருகிறோம். அவர்கள் குறித்த தகவல் தந்தால் பஞ்சாப் அரசு ரூ. 1 கோடி சன்மானம் வழங்கும். இந்த வரைபடங்களை தேவைப்படும் அனைவருக்கும் வழங்க இருக்கிறோம். தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தேடி வருகிறோம். அவர்களை பிடிப்பது தான் எங்களது முதல் வேலை என்றார்.












Click it and Unblock the Notifications