கிருஷ்ணகிரி- கூட்டுறவு வங்கியில் முகமூடி கொள்ளை
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு கொள்ளையடித்துள்ளது.
தேன்கனிக்கோட்டைக்கு அருகே தாரண்டபள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வரதராஜன் மட்டும் பணியில் இருந்தார்.
இதை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் கறுப்பு நிற மாருதி காரில் வங்கிக்கு வந்தது. அவர்களில் ஒருவன் கொள்ளையடித்ததும் தப்பித்து ஓடும் வகையில் காரை தயாராக வைத்திருத்தான்.
மற்ற இருவர் யாராவது வெளியாட்கள் வருகிறார்களா என்பதை கவனிக்க வங்கி வாசலில் நின்று கொண்டனர். மீதமிருந்த இருவர் முகமூடி அணிந்தபடி வங்கிக்குள் சென்று உதவியாளரை மிரட்டியுள்ளனர். அவரிடம் பணம் இருக்கும் இடத்தை காட்டும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்க அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அவரது மேஜையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு கொள்ளை கும்பல் காரில் தப்பியது. கொள்ளை சம்பவம் நடந்தபோது வங்கி செயலாளர் பரமசிவம் ஊரில் இல்லை. கிருஷ்ணகிரி சென்றிருந்த அவருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவர் விரைந்து வந்து நகை மற்றும் பணத்தை கணக்கிட்டார்.
அப்போது அவர்கள் அலுவலக மேஜையில் இருந்த ரூ. 5,330 மட்டுமே அவர்கள் எடுத்தது தெரியவந்தது. மேஜை டிராயரில் இருந்த ரூ. 30,500 ரொக்க பணம் மற்றும் வங்கி லாக்கரில் இருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை அவர்களால் எடுக்க முடியவில்லை.
அதன்பிறகு வங்கி செயலாளர் தளி போலீசில் புகார் செய்தார்.
கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த வங்கி உதவியாளர் வரதராஜன் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.