சீமானிடம் இன்று விசாரணை
நெல்லை: இயக்குனர் சீமானிடம் இன்று புதுச்சேரி மற்றும் நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதால், நெல்லை நீதிபதி அவரிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பொது கூட்டத்தில் இயக்குனர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
நெல்லையில் நடந்த வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுகூட்டத்திலும் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசியதாக இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை போலீசார் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவரை 6ம் தேதியான இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் ஹேமா சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.
ஆனால், இன்று புதுச்சேரி போலீசார் இயக்குனர் சீ்மானை இன்று அங்குள்ள சிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இதனால் அவரை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என அங்குள்ள ஜெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சீமானை நெல்லை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பிரான்சிங் மூலம் பாண்டிசேரி போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
புதுச்சேரி ஜெயிலில் வீடியோ கான்பிராசின்ங் வசதி இல்லாததால் சீமானை விழுப்புரம், அல்லது கடலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்து வீடியோ கான்பிராசின்ங் மூலம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.