ஆப்கனில் கொல்லப்பட்ட சைமனின் உடல் சொந்த ஊர் வந்தது
விழுப்புரம்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சைமனின் உடல் இன்று சொந்த ஊரான பிரம்மகுண்டத்திற்கு வந்து சேர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் இத்தாலி நாட்டு பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சைமன் அங்கு தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடலை 23 நாட்களுக்குப் பின்னர் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சைமனின் உடலை விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து சொந்த ஊருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சங்கராபுரம் ஒன்றிய குழு தலைவர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் தசரதன், கவுன்சிலர் துரைவேலவன், ஆகியோர் சைமனின் உடலை காரில் பிரம்மகுண்டம் கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
சைமனின் உடலைப் பார்த்து அவரது மனைவி வசந்தி மற்றும் குழந்தைகள், உறவினர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். கிராமமே சோகமயமாக காணப்பட்டது.
இன்று மாலை சைமனின் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.