கூட்டணி: 2 நாட்களில் முடிவு-ராமதாஸ் அறிவிப்பு

லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாமகவுக்கு அதிமுக 6 லோக்சபா சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை பாமக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சென்னை சூளையைச் சேர்ந்த ஸ்ரீதரின் உடலுக்கு இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திருமாவளவனும் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிரை மாய்த்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த திருமாவளவன், வைகோ, நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் உணர்ச்சி மிகுதியால் இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.
மதிப்பிட முடியாத இந்த தியாகத்தை யாரும் தொடர வேண்டாம் என்றார்.
அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 2 நாளில் பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது. அதில் முடிவு செய்வோம் என்றார் ராமதாஸ்.
ஜெ. உண்ணாவிரதத்திற்கு வரவேற்பு:
முன்னதாக டாக்டர் ராமதாஸை, திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியில் வந்த ராமதாஸிடம், ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர்களுக்காக நடத்தப்படும் உண்ணாவிரதம் இது. எனவே இதை வரவேற்கிறோம் என்றார்.
அதேபோல திருமாவளவன் கூறுகையில், காலம் கடந்த முடிவு என்றாலும் கூட இலங்கைத் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தை இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரவேற்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications