புதுச்சேரியை காங்கிரஸுக்கே தர வேண்டும்: மேலிடத்தில் வைத்தி வலியுறுத்தல்
டெல்லி: பாரம்பரியாக காங்கிரஸ் கட்சி வென்று வந்துள்ள புதுச்சேரி தொகுதியை இந்த முறையும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி விடாமல் நாமே போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே வென்று வந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலி்ல இந்தத் தொகுதியை பாமக கேட்டு வாங்கி விட்டது. இதனால் காங்கிரஸார் கடும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் அவர்களை கட்சி மேலிடம் சமாதானப்படுத்தியது. அத்தேர்தலில் பாமகவைச் சேர்ந்த ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் பாமகவுக்கோ அல்லது வேறு கூட்டணிக் கட்சிக்கோ தொகுதியைத் தரக் கூடாது. காங்கிரஸே போட்டியிட வேண்டும் என முதல்வர் வைத்திலிங்கம் கட்சி மேலிடத்தை வலியுறுத்தியுள்ளார்.
வைத்திலிங்கம் நேற்று டெல்லியில், தங்களது மாநில மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதுடன், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.
அவருடன் புதுச்சேரி சபாநாயகர் சுப்பிரமணியன், அமைச்சர் வல்சராஜ் ஆகியோரும் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் பேசுகையில்,
காரைக்கால், புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய 4 பிரிவுகளைக் கொண்ட எங்கள் மாநிலத்தில் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் தற்போது வலுவுடன் இருக்கிறது. ஆகவே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை குலாம் நபி ஆசாத்திடம் விளக்கினோம்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு உழைப்போம்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பா.ம.க. தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதால், வரும் தேர்தலில் புதுச்சேரி அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் மேலிட முடிவை மதித்து கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.