வக்கீல்களுடன் தலைமை நீதிபதி பதவியேற்கவுள்ள கோகலே பேச்சுவார்த்தை
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள ஹேமந்த் லட்சுமண் கோகலே, இன்று வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களைத் தாக்கிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில், வக்கீல்கள்தான் மோதலுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வக்கீல்கள் கலகத்தில் ஈடுபட்டதால் அதைத் தடுக்க போலீஸாரும் அத்துமீறி திட்டமிட்டு செயல்பட்டதாகவும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கையை புறக்கணிப்பதாகவும், தங்களது போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் உயர்நீதிமன்ற வக்கீல்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோகலே நேற்று சென்னை வந்தார்.
ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள அவர் இன்று வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கோகலேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்புமாறு வக்கீல்களிடம் நீதிபதி கோகலே கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், 11ம் தேதி கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளார். அதுவரை போராட்டம் தொடரும். அதில் மாற்றமில்லை என்று தெரிவித்தனர்.