அவுட்சோர்ஸிங் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் - மூடீஸ்
டெல்லி: அவுட்சோர்ஸிங் செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
அவுட்சோர்சிங் செய்ய இந்தியா தான் சிறந்த இடம். குறைந்த விலையில் இங்கு கிடைக்கும் சேவைகள் வேறு எங்கும் கிடைக்காது. எனவே என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து இந்தியாவே முன்னணியில் இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில், அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்களுக்கு வரி சலுகை கிடையாது என அறிவித்தார். இதனால், ஏற்கனவே உலக பொருளாதார வீழ்ச்சியால் சரிவை சந்தித்திருக்கும் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஆட்டம் கண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற இடம் இந்தியா தான் என்கிறது அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடீஸ்.
இது குறித்து அந்நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் சான் கூறுகையில்,
அவுட்சோர்ஸிங் செய்ய ஏற்ற நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதலிடம். இதற்கு இந்தியாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஆங்கில புலமை அதிகம் கொண்ட இளைஞர்களும் தான் காரணம்.
இந்த வேலைகளை இதைவிட குறைந்த செலவில் மேற்கு ஐரோப்பாவில் செய்ய முடியாது.
தற்போது உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பிபிஓ துறை பின்னடைவை சந்தித்திருக்கும். இது விரைவில் மீண்டு வரும். தற்போது முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதால் வளர்ச்சி வேகம் மெதுவாக தான் இருக்கும் என்றார் சான்.