பட்நாயக் அரசு மீது 11ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு - 3வது அணியில் இணைகிறார்
புவனேஸ்வர்: பிஜு ஜனதாதளம் கூட்டணியை விட்டு விலகியதால் நவீன் பட்நாயக் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. இதனால் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் பட்நாயக், வருகிற 11ம் தேதி தனது அரசு மீதான பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஒரிசா ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இடதுசாரிகள் கொடுத்துள்ள ஆதரவைத் தொடர்ந்து பிஜூ ஜனதாதளம் 3வது அணியில் இணைகிறது.
ஒரிசாவில் கடந்த 11 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி வைத்திருந்தன. மிகவும் இறுக்கமாக இருந்து வந்த இந்த கூட்டணியை உருவாக்கியவர் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் ஆவார்.
அத்தனை கட்சிகளும் பொறாமைப்படும்படியாக இந்த கூட்டணி வலுவாக இருந்தது. 1997ம் ஆண்டு கூட்டணி உருவான பின்னர், 98, 99, 2004 ஆகிய லோக்சபா தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தன.
2000 மற்றும் 2004 சட்டசபைத் தேர்தல்களிலும் இந்த வெற்றிக் கூட்டணியே வென்று மாநில ஆட்சியையும் கைப்பற்றியது.
இப்படி வெற்றி நடை போட்டு வந்த இந்த கூட்டணி திடீரென உடைந்து போய் விட்டது. காரணம், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்.
கூடுதல் சீட்களை பாஜக கேட்டதால் அதை தர முடியாது நவீன் பட்நாயக் மறுத்தார். இதையடுத்து பாஜகவின் போக்கும், பிடிவாதமும் பிடிக்காமல் கூட்டணி உடைந்து விட்டதாக அதிரடியாக அறிவித்தார் பட்நாயக்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக, பட்நாயக் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது.
இதையடுத்து பட்நாயக் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
மொத்தம் 147 உறுப்பினர்களை கொண்ட ஒரிசா சட்டசபையில் நவீன் பட்நாயக் கட்சிக்கு 61 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கோ 32 பேர் உள்ளனர். பெரும்பான்மை பலத்திற்கு 74 எம்.எல்.ஏக்கள் தேவை. தற்போது பாஜக விலகி விட்டதால், 13 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.
கை கொடுத்த இடதுசாரிகள்..
இருப்பினும் இடதுசாரிகள் (2), தேசியவாத காங்கிரஸ் (2), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (4) மற்றும் சுயேச்சைகள் (8)பிஜூ பட்நாயக் அரசுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர்.
இடதுசாரிகளின் தீவிர முயற்சியால் தற்போது நவீன் பட்நாயக் 3வது அணியில் இணைய முடிவு செய்து விட்டார்.
இன்று அவர் 3வது அணியில் இணைவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
76 எம்.எல்.ஏக்கள் ஆதரவு ..
இந்தப் பின்னணியில் நேற்று ஆளுநர் பண்டாரியை நவீன் பட்நாயக் சந்தித்தார். அப்போது 76 எம்.எல்.ஏக்களின் கையெழுத்து அடங்கிய பட்டியல் ஒன்றை அவரிடம் அளித்தார்.
பட்நாயக்குடன், பிஜூ ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.
பட்டியலைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் பண்டாரி, 11ம் தேதி சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து 11ம் தேதி சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலுடன் ஒரிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அங்கு வெடித்துள்ள அரசியல் சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.