தேர்தல் ஏற்பாடுகள்-நவீன் சாவ்லா சென்னை வருகை
சென்னை: தமிழகத்தில் நாடாராளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நாளை சென்னை வருகிறார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
12ம் தேதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் நவீன் சாவ்லா ஆய்வு செய்வார்.
தமிழ்நாட்டில் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிப்பை பொறுத்தவரையில் 99.05 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தேர்தலுக்கு முன் அனைவருக்கும் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு விடும். விடுபட்டவர்கள், வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் நடத்தைவிதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் தொடர்பாக, கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்கள், சாதனைகளை தொலைக்காட்சிகள், கேபிள் டி.வி.கள் மற்றும் வானொலி மூலம் ஒளிபரப்புவதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளோ, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்கான அனுமதியை வழங்க தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர், சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர், சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநர் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
வேட்பாளர்கள், தங்கள் விளம்பரங்களை வெளியிடும் முன், இந்த குழுவிடம் அனுமதி பெற வேண்டும். பதிவு பெற்ற கட்சியினர் விளம்பரம் வெளியிடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மற்றவர்கள் 7 நாட்களுக்கு முன்பும் தங்கள் விளம்பரங்களுக்கு இந்த அனுமதியை பெறவேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அனுமதி இன்றி எந்த ஒரு விளம்பரமும் ஒளி, ஒலிபரப்பக்கூடாது.
வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பான புகார்கள், குறைகளை தெரிவிப்பதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், மத்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளர், சென்னை தொலைக்காட்சி உதவி நிலைய அதிகாரி ஸ்ரீராம், சென்னை வானொலி நிலைய வர்த்தக ஒலிபரப்பு சேவையின் இயக்குநர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
தேர்தலில் பார்வையற்றவர்கள் ஓட்டுப் போடுவதற்காக தனியாக எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி' எழுத்தில், வேட்பாளர் பெயர் மற்றும் எண்கள் ஆங்கிலத்தில் இடம்பெறவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தைவிதிகளின்படி, அரசின் மருத்துவ முகாம் போன்ற எந்த ஒரு இலவச திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் போன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு இது பொருந்தாது.
தேர்தல் ஆணையத்தின் தமிழக இணையத் தளமும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல், பெயர் சேர்க்க-நீக்க தேவையான படிவங்கள், தமிழகத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகள், தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல், ஓட்டுச்சாவடி அளவிலான அதிகாரிகள் பட்டியல்,
புகைப்பட வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள், தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை, போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவங்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் பட்டியல், சந்தேகங்களுக்கான பதில்கள் போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அந்த இணையதளங்களின் முகவரி: