போலீ்ஸ் நடந்து கொண்ட விதம்-விசாரிக்க உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் நடந்த மோதலின்போது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பற்றியும், அதற்கு பொறுப்பானவர்களை கண்டறியவும் ஒரு உயர்நிலை அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசாருக்கும்- வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலையடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்றப் பணிகள் அடியோடு முடங்கிக் கிடக்கின்றன. வழக்கு விசாரணைகள் ஏதும் நடக்கவில்லை. ஜாமீன் மனுக்கள் விசாரணை கூட நடக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் போலீசார் மற்றும் வழக்கறிஞர்களிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் இரு தரப்பினரையும் அவர் விமர்சித்திருந்தார். அந்த அறிக்கையை வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை உயர்நீதிமன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்து அதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவுப்படி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களின்போது காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பற்றியும், அதற்கு பொறுப்பானவர்களை கண்டறியும் பொருட்டும், தமிழக அரசின் ஒரு உயர்நிலை அதிகாரியை கொண்டு விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி முகோபாத்யாவை மாற்ற உத்தரவு?:
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி கோகலே, நீதிமன்றத்தி்ல் ரகளை நடந்தபோது தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த முகோபாத்யாவை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
இது தொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவாளரிடமிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நீதிபதியுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை:
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள கோகலேவை தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அவர்களை தொடர்ந்து டி.ஜி.பி. ஜெயின், ஏ.டி.ஜி.பி. அனுப் ஜெய்ஸ்வால், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications