அத்துமீறிய யுஎஸ் போர் கப்பல்-வெளியேற்றிய சீனா
வாஷிங்டன்: சீன கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பலை சீன கப்பல்கள் சுற்றி வளைத்தன. அவற்றை அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறுமாறு எச்சரித்து விரட்டின.
யுஎஸ்என்எஸ் இம்பெகபிள் எனும் அமெரிக்க போர்க் கப்பல் ஆயுதங்கள் எதுவுமின்றி சீனாவின் ஹெய்னான் தீவுக்கு 150 கிமீ., தெற்கே போய் கொண்டிருந்தது. அப்போது அங்கு சீன கொடி ஏந்தி வந்த இரண்டு கப்பல்கள் அந்த இடத்தைவிட்டு உடனே விலகி செல்லுமாறு அமெரிக்க கப்பலுக்கு உத்திரவிட்டுள்ளன.
அதில் ஒரு சீன கப்பல், அமெரிக்க கப்பலுக்கு 25 அடிக்கு அருகில் வந்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சக்கூடிய சூழலை உருவாகியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமையகமான பென்டகன் செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில்,
சீனர்கள் எங்கள் கப்பலுக்கு வேண்டுமென்றே தொல்லை தந்துள்ளனர். அமெரிக்க கப்பலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சீன கப்பல் ஒன்று மிக அருகில் வந்து பயமுறுத்தியது. சீனா சர்வதேச விதிமுறைகளை மீறி வருகிறது.
அமெரிக்க கப்பல் சர்வதேச கடற்பகுதியில் தான் சென்று கொண்டிருந்தது. சீனா இது போல் அடு்த்த முறை செய்யாது என்றும், பொறுப்புடன் நடந்து கொள்ளும் எதிர்பார்க்கிறோம் என்றது.
ஆனால் சீனா அமெரிக்காவின் குற்றாச்சாட்டை மறுத்துள்ளது. எங்கள் எல்லைக்கு அனுமதியின்றி நுழைந்ததால் தான் அது விரட்டப்பட்டது என்கிறது. இந்த விவகாரத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.