ஒரிசா நம்பிக்கை வாக்கெடு்ப்பு: தப்பியது நவின் பட்நாயக் அரசு
பாஜகவுடனான உறவை தடாலடியாக முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து பட்நாயக் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.
இதையடுத்து நவீன் பட்நாயக் அரசு சிறுபான்மை அரசானது. இருப்பினும் இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உளளிட்ட கட்சிகள் கை கொடுக்க முன்வந்தன.
இதையடுத்து ஆளுநரின் உத்தரவுப்படி இன்று முதல்வர் பட்நாயக், சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இதையடுத்து விவாதம் தொடங்கியது.
விவாதம் தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் கோரியும் அவர்கள் உட்காராமல் கோஷமிட்டபடி இருந்தனர். இதையடுத்து அவை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அவை கூடியதும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நவின் பட்நாயக் அரசு வெற்றி பெற்றது. ஆனால், ஓட்டெடுப்பில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.