கைய குடுங்க.. இனிமே நாம ப்ரண்ட்ஸ்! கரூரில் கர்ஜித்த விஜய்! தவெக மா.செ.க்களை நெருங்கும் திமுக மாஜிகள்
சென்னை: தமிழக அரசியலில் குறிப்பாக திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது முதலமைச்சர் ஜோசப் விஜயின் கரூர் பேச்சு. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், சில திமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக இந்த விவகாரம் பேசப்படுகிறதாம். ஏற்கனவே கேஎன் நேரு, செந்தில் பாலாஜி, எவ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் நெருக்கடியில் இருக்கும் நிலையில், சில முன்னாள் அமைச்சர்கள் தவெக மாவட்ட செயலாளர்களுடன் பேசுகிறார்களாம்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வி அடைந்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற சி. ஜோசப் விஜய், திமுகவின் ஊழல் புகார் குறித்து தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கேஎன் நேரு, எவ வேலு, செந்தில் பாலாஜி ஆகிய அமைச்சர்களின் சில விவகாரங்கள் தோண்டி எடுக்கப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளது.
விஜய் கரூர் பேச்சு
இந்த நிலையில் கரூர் சோக சம்பவத்திற்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் அதே கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது பேசிய அவர் கடந்த திமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று வரும் நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள் என பேசி இருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூர் கம்பெனி முதலாளி என மறைமுகமாக குறிப்பிட்டு அவர் எங்கே இருக்கிறார், என்பதே தெரியாத அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார் என பேசியதும் முன்னாள் அமைச்சர் எவ வேலுவை மறைமுகமாக குறிப்பிட்டு சிங்கப்பூரில் ஒளிந்திருக்கிறார் என பேசியதும் கவனிக்கத்தக்கது.
செந்தில் பாலாஜி
ஏற்கனவே டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், நெடுஞ்சாலை துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இருவரும் விசாரணைக்காக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயின் இந்த பேச்சு நிச்சயம் இருவரையும் குறிப்பிட்டு தான் இருக்கும் என்கின்றனர்.
அனிதா ராதாகிருஷ்ணன்
அதேபோல திமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார். இந்த நிலையில் கரூரில் விஜயின் பேச்சு திமுக அமைச்சர்களிடையே ஒருவித பதட்டத்தை ஏற்படுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது திமுக வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் தற்போது அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள்
சில புகார்கள் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் புகாருக்கான ஆதாரங்கள் கிடைக்க அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்படலாம் எனவும் உரிய ஆதாரங்கள் கிடைத்தால் விரைவில் விசாரணை தீவிரமடைந்து முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். மேலும் திமுக அமைச்சர்களும் தங்கள் குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அல்லது விசாரணை அமைப்புகளை எதிர்கொள்வது சட்ட நடவடிக்கைகள் முன்ஜாமீன் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக மாவட்டச் செயலாளர்கள்
இதற்கிடையே கடந்த காலங்களில் திமுகவுடன் நெருக்கமாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் நட்புறவை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் ரசிகர் மன்றத்திலிருந்து போது பல்வேறு வகைகளில் உதவி செய்தனர். தற்போது அவர்கள் மூலமாக விஜய் அரசின் அடுத்த நடவடிக்கை என்ன? தங்கள் மீதான வழக்குகளின் நிலை எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஐடியா கேட்டு வருகிறார்களாம்.














Click it and Unblock the Notifications