வீட்டுக் காவலில் நவாஸ் ஷெரீப்-இம்ரான் கான்
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், மற்றும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் ஆகியோரை வீட்டுக் காவலில் வைக்க போலீசாருக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற சமீபத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.
தங்கள் மீது தடைவிதிக்கப்பட்டதன் பின்னணியில் அதிபர் சர்தாரி இருப்பதாக குற்றம்சாட்டிய ஷெரீப் சகோதரர்கள் தங்களது கட்சியின் சார்பில் பெரும் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில் சர்தாரி அரசு இந்த போராட்டத்தை தடுக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படும் என முன்னாள் அதிபர் முஷராபால் நியமிக்கப்பட்ட தற்போதைய ராணுவ தளபதி கியானி, மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் போராட்டத்தை தடுக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் குவாசி ஹூசைன் அகமது ஆகியோரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
தளபதிகளுடன் சர்தாரி ஆலோசனை:
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கியானி, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கலாம், ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற சூழ்நிலை வலுத்து வரும் நிலையில், பாகிஸ்தானின் முப்படைத் தளபதிகளையும் அழைத்து பிரதமர் கியானி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிபர் சர்தாரி ஈரான் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கிடையே நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அதிபரிடம் இருந்து பறித்து பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
தூதரக பாதுகாப்புக்கு இந்திய கமாண்டோக்கள்:
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் பாதுகாப்புக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவப் புரட்சி வெடித்தால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு தரும் பணியை இவர்கள் மேற்கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications