ராமரை பழித்து பேச தயாரா?-கருணாநிதிக்கு பாஜக சவால்
சென்னை: தேர்தல் களத்தில் ராமரை பழித்து பேச திமுக தலைவர் கருணாநிதி தயாரா என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் சவால் விடுத்தார்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் ராமரை பற்றி முதல்வர் கருணாநிதி அவதூறாக பேசுவது வழக்கம். ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார், அவர் குடிகாரர் என்றெல்லாம் பேசுவார். நான் அவருக்கு சவாலாக கேட்கிறேன்.
தேர்தல் களத்தில் ராமரை பற்றி இழித்தும், பழித்தும் பேச கருணாநிதி தயாரா?. அப்படி அவர் பேசுவாறேயானால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் கூட்டணி டெபாசிட் இழக்கும்.
100 நாளில் இலங்கை பிரச்சனை தீரும்!!!!!:
தமிழக மக்களுக்கு 2 உத்தரவாதங்களை தமிழக பிஜேபி சார்பில் தர தயாராக இருக்கிறேன். அத்வானி அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கைப் பிரச்சனைக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நதிநீர் இணைப்புக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உறுதிமொழி அளித்திருந்தார். இப்போது நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படும். முதல்கட்டமாக தென்னக நதிகள் இணைப்பிற்கு தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்படும்.
சோனியா பதவிக்கு ஆசைப்படுகிறார். கடந்த 2004ல் அவர் பிரதமராக முயன்றார். ஆனால் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அதைத் தடுத்துவிட்டார். இப்போது யாரும் தடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஊழல் குற்றச்சாட்டு உள்ள பிரதீபா பாட்டீலை ஜனாதிபதி ஆக்கியுள்ளார்.
காங்கிரஸ் பின்னணி கொண்ட நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக கொண்டு வரப்பட்டுள்ளார். சோனியாவை பிரதமராக்க திறமையாக காய் நகர்த்தப்படுகிறது.
60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாராலும் ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாதவர் அத்வானி. அவர் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நல்ல வேட்பாளர் யார் நல்ல கட்சி எது என்று பார்த்து மக்கள் வக்களிக்க வேண்டும்.
அத்வானி பிரதமரானால் தான் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட முடியும் என்றார் இல.கணேசன்.
நாங்கள் மதவாதிகளா?:
முன்னதாக அவர் அளித்த பேட்டியில்,
பாஜக தொடங்கிய நாளிலிருருந்து என்ன சித்தாந்தத்தை கூறி வருகிறோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால், மற்ற கட்சிகள் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு தாஜா செய்யும் போக்கை கையாள்கின்றன. இதனால்தான் பிரிவினைவாதம் வளர்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான தர்மயுத்தத்தில் நாங்கள் தனித்து நிற்கிறோம். எதிர் அணியில் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அது கெளரவர் சேணை.
நாங்கள் தனித்து விடப்படவில்லை. தனித்துவமாக இருக்கிறோம். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற தேச பக்தர்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளையும் காங்கிரசையும் தவிர அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள்தான்.
அப்போது அந்த கட்சிகள் பாஜக மதவாத கட்சி என்று யார் சொன்னது? என்று உரத்த குரலில் முழக்கமிட்டார்கள். இப்போது மதவாத கட்சி என்கிறார்கள்.
தேசியவாதத்தைத் தான் மதவாதம் என்கிறார்கள். பள்ளிகளில் படிக்கும் முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறார்கள். இது மதவாதம் இல்லையா?
சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்காக நாடகம் ஆடுகிறார்கள். பாஜக எந்த மதத்துக்கு எதிரானது அல்ல.
இதற்கு ஒரு உதாரணம்தான் அப்துல் கலாமை நாங்கள் ஜனாதிபதி ஆக்கியது என்றார்.












Click it and Unblock the Notifications