திமுகவிடம் 20 தொகுதிகள் கேட்க காங் திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் அடங்கிய குழு இன்று மாலை திமுக குழுவுடன் பேச்சு நடத்தவுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் குழு இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் கூடி விரிவான ஆலோசனை நடத்தியது. அதில் திமுகவிடம் 20 தொகுதிகள் வரை கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி:
நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் எடுக்க வேண்டிய நிலை, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாங்கள் தொடர்ந்து கூடி பேசுவோம். இன்று மாலை அறிவாலயத்துக்கு சென்று தோழமை கட்சியான திமுகவுடன் பேசுவோம் என்றார்.
கேள்வி: வேறு எந்த கட்சியுடன் பேசுவீர்கள்?
பதில்: பாமக போன்ற கட்சிகள் எங்கள் கூட்டணியில்தான் இருக்கின்றந. ஒவ்வொரு கட்சியினருடனும் அடுத்தடுத்துப் பேசுவோம்.
கேள்வி: பாமக உங்கள் அணியில் இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் பாமக தரப்பில் அப்படி அறிவிக்கவில்லையே?
பதில்: தேர்தல் யுக்திகளை வகுக்க, எதிர்கால நலன்கள் பற்றி சிந்திக்க ஒவ்வொரு கட்சியினரும் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதே போல் அவர்களும் பேச வேண்டி இருக்கிறது.
கேள்வி: திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்பீர்களா?
பதில்: கண்டிப்பாக கேட்போம்.
கேள்வி: தேமுதிகவை உங்கள் கூட்டணிக்கு அழைப்பீர்களா?
பதில்: சோனியாவின் தலைமையை ஏற்கிற, மதசார்பற்ற சக்திகள் ஒன்றாக இணைய வேண்டும். அதை வரவேற்கிறோம் என்றார் தங்கபாலு.