சென்னை-திமுக பஞ்சாயத்து தலைவர் கொலை
சென்னை: சென்னை அருகே திமுகவைச் சேர்ந்த திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் குவாரி தொழிலில் ஏற்பட்ட மோதலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் லாரிகளை தீவைத்து எரித்தனர்.
சென்னை அருகே உள்ள திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் ராமச்சந்திரன். 43 வயதான இவர் திமுகவைச் சேர்ந்தவர். குவாரித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
அப்பகுதியில் ஒரு குவாரியை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். அவருக்கும் அதே பகுதியில் குவாரி நடத்தி வரும் இன்னொருவருக்கும் இடையே தொழில்போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில், ராமச்சந்திரன், தனது நண்பரான ஸ்டீபனுடன், குவாரிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அவரை வெட்டி கொன்றனர்.
இதையடுத்து ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். எதிர்த்தரப்பு குவாரிக்குச் சென்ற அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை தீவைத்துக் கொளுத்தினர். டிராக்டர் ஒன்றும் எரிக்கப்பட்டது. குவாரி அலுவலகமும் தீக்கிரையானது.
அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திரிசூலம் பகுதியில் அவ்வப்போது கொலைகள், தாக்குதல்கள், மோதல் என தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications