உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று மனித சங்கிலி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல்கள் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
உயர்நீதமன்ற தாக்குதலுக்குக் காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வக்கீல்கள் நேற்று உயர்நீதிமன்றத்திலிருந்து மெமோரியல் ஹால் வரை ஊர்வலம் சென்று பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். லா அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணகுமார், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
முடிவில் பால் கனகராஜ் பேசுகையில்,
சென்னை ஐகோர்ட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போனதாக தெரிய வந்துள்ளது. சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட அவர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்படுவார்கள்.
எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் சங்கம் தலையிடாது. போலீஸ் அதிகாரிகள் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகத்துடன் குற்றமும் செய்துள்ளனர். குற்றம் செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இந்தப் போராட்டம் ஓயாது.
எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் அடுத்த நிமிடமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம். நீதித்துறையை காப்பாற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை ஐகோர்ட்டை சுற்றி மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்றார்.
மேலும், 20ம் தேதி மாநில அளவிலான பிரமாண்ட பேரணியை சென்னையில் நடத்தவும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.
பேரணியின் முடிவில், ஆளுநர் பர்னாலாவிடம் மனு அளிக்கப்படவுள்ளது.