தேர்தலுக்கு முன் பிளஸ்டூ தேர்வு முடிவுகள்?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே பிளஸ்டூ தேர்வு முடிவை வெளியிட தமிழக அரசின் தேர்வுகள் துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டுள்ளது.
மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடங்கியது. மார்ச் 23ம் தேதியுடன் பரீட்சை முடிவுக்கு வருகிறது.
அதேபோல மார்ச் 25ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ம் தேதி இத்தேர்வு முடிவடைகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சினைகள், குழப்பங்கள் இந்த ஆண்டு இடம் பெறாத வகையில் மிகவும் கவனமாக விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தேர்வுகள் துறை கவனமாக உள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 50 மையங்களில் பிளஸ்டூ விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்தும் பணி முதல் கட்டமாக விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது லோக்சபா தேர்தல் வந்து விட்டது. எனவே தேர்தலுக்கு முன்பாகவே பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 9ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டு மே 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு மே 13ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்த ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே முன்கூட்டியே முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது. அனேகமாக மே முதல் வாரத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு உள்ளிட்ட பிற தேர்வுக்கான முடிவுகள் தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் வெளியாகும்.
பேன்ட்டுக்குள் பிட்-சிக்கிய மாணவர்:
இதற்கிடையே, இன்று நடந்த புவியியல் தேர்வில் பிட் அடித்து சேலம் மாணவர் ஒருவர் பிடிபட்டார்.
சேலம் மாவட்டம் நடுப்பட்டியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அப்போது மாணவர் ஒருவர் தனது பேண்ட்டில் பி்ட் வைத்திருந்ததை தேர்வு மைய கண்காணிப்பாளர் பார்த்து விட்டார். உடனே அவர் மாணவனை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தார். அந்த மாணவர் எழுதிய விடைத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.