யுஎஸ், ஜெர்மனி: துப்பாக்கி கலாச்சாரம்-26 பேர் பலி
பெர்லின்: ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் நடந்த இரு பயங்கர சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு மொத்தம் 26 பேர் பலியாயினர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கிகள் மக்களிடையே சகஜமாகிவிட்ட நிலையில் அங்கு வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருகிறது. முன்கோபிகள் சிறு தகராறுகளுக்கு கூட துப்பாக்கியை எடுப்பதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஜெர்மனியில் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகே உள்ள பள்ளியில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் முகமுடி அணிந்து வந்து திடீர் தாக்குதல் நடத்தினான். இதனால் வகுப்பறைக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து சிதறி ஓடினர்.
சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து காயமடைந்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவன் வகுப்பில் இருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே 9 மாணவர்கள், 3 ஆசிர்யர்கள் உள்பட 12 பேர் பலியாயினர்.
பின்னர் பள்ளியில் இருந்து வெளியேறிய அவன் ரோட்டில் போய் கொண்டிருந்த மருந்ததுவமனை ஊழியரையும், மற்ற இருவரையும் சுட்டு கொன்றுள்ளான். பின்னர் ஒரு காரை கடத்தி தப்பிக்க முயற்சி செய்தான். அவனை விரட்டிபிடிக்க முடியாமல் போகவே போலீசாரை அவனை சுட்டுக்கொன்றனர்.
திட்டமிட்டு கொலை...
இதேபோல் அமெரிக்காவின் அலபாமா நகரில் 28 வயதான மைக்கேல் மெக்லெண்டன் என்பவர் 10 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் இக்கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளதாக தெரிகிறது. தனக்கு பிடிக்காத நபர்களை அல்லது தனக்கு பிடிக்காததை செய்தவர்களை பட்டியலிட்டு அவன் கொன்றுள்ளான்.
அவனால் முதலில் கொல்லப்பட்டவர் அவனது தாய் தான். பின்னர் தனது பாட்டி, மாமா, இரண்டு சகோதரர்கள் ஆகியோரை திட்டமிட்டு கொன்றுள்ளான். பின்னர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதில் அவனது மனைவி மற்றும் 18 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து அவன் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.