நாயுடுவுக்கு ஆதரவாக பிரசாரம்.. ஜூனியர் என்.டி.ஆருக்கு லட்சுமி சிவபார்வதி சாபம்
ஹைதராபாத்: தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால் அழிந்து போய் விடுவாய் என ஜூனியர் என்.டி.ஆருக்கு, மறைந்த என்.டி.ராமாராவின் 2வது மனைவி லட்சுமி சிவபார்வதி சாபம் விட்டுள்ளார்.
என்.டி.ஆர். தனது கடைசி காலத்தில் லட்சுமி சிவபார்வதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் என்.டி.ஆரின் குடும்பத்தினர் வெகுண்டெழுந்தனர்.
லட்சுமி சிவபார்வதி கையில் கட்சி போய் விடுவதைத் தடுப்பதற்காக அனைவரும் மருமகன் சந்திரபாபு நாயுடு பின்னால் அணி திரண்டனர். மாமனாரின் ஆட்சியைக் கவிழ்த்த நாயுடு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றினார்.
அதன்பின்னர் லட்சுமி சிவபார்வதி ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவ்வப்போது சந்திரபாபு நாயுடுவை விமர்சித்து அறிக்கை விட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள ஆந்திர மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய என்.டி.ஆரின் மகன்கள் பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோரையும், பேரன் ஜூனியர் என்.டி.ஆரையும் ஏற்பாடு செய்துள்ளார் நாயுடு.
இதற்கு சிவபார்வதி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆர். பிரசாரம் செய்தால் அழிந்து போய் விடுவார் என கோபமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பார்வதி கூறுகையில், முதுகில் குத்திய துரோகி என்று சந்திரபாபு நாயுடுவை ராமராவ் வர்ணித்தார். ஏழைகளுக்காகவே ஆட்சி நடத்தியவர் ராமராவ். ஆனால், பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தியவர் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு நாயுடுவை பாலகிருஷ்ணாவும், ஜூனியர் என்.டி.ஆரும் ஆதரிப்பது வேதனை அளிக்கிறது. துரோகியை ஆதரித்து பிரசாரம் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர். அழிந்து போய் விடுவார் என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார் சிவபார்வதி.