அதிமுக நிதி செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களைச் சேரும் - ஜெ.
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் திரட்டப்பட்ட நிதி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக இலங்கைத் தமிழர்களை சென்றடையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றவுடன், ஒரே நாளில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து, அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது சாத்தியமா? என்று தன்னுடைய அறிக்கையில் வினவியிருக்கிறார் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதி.
நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்ற அறிவிப்பு 5.3.2009 அன்றே வெளிடப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளை மூன்று, நான்கு நாட்களில் மத்திய அரசு தாராளமாக செய்யலாம்.
இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதிநவீன சாதனங்களையும் அளித்த போதும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்த போதும் எதுவும் கூறாத கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை
தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, வெளி நாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் நான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
தடுக்கப் பார்க்கிறார் கருணாநிதி..
கருணாநிதியினுடைய அறிக்கையின் வரிகளைப் பார்த்தால், அ.தி.மு.க. சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
எனக்கும், அ.தி.மு.க.விற்கும் எதிராக கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்திருக்கிறேன். அந்த வகையில், இந்தத் தடையையும் நான் முறியடிப்பேன்.
அ.தி.மு.க.வால் திரட்டப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான நிதி முறையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
உண்டியலில் விழுந்த மோதிரம், வாட்ச்..
ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை தமிழருக்காக அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தின் போது, உண்டியல்கள் வாயிலாக நிதி திரட்டப்பட்டது. அனைத்து உண்டியல்களும் தலைமை கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு கடந்த 11-ந் தேதி வங்கி அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
அதில் 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகள், பிற நாட்டு நாணயங்கள், இரண்டு தங்க மோதிரங்கள், ஒரு கைக் கடிகாரம் போன்ற பொருட்களையும் பொதுமக்கள் அளித்துள்ளனர்.
காசோலைகள் மற்றும் பிறநாட்டு நாணயங்கள் வங்கி மூலமாக மாற்றப்பட்டும், தங்க நாணயங்கள் மற்றும் கைக்கடிகாரம் போன்ற பொருட்கள் அதற்குரிய கடைகளில் கொடுத்து, அதற்கான தொகை பெறப்பட்டு இலங்கை தமிழர்களுக்கான நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த தொகைக்கான வரைவோலை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications