திமுக - காங். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு: புதுக் கட்சிகள் இணையும்!
லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நேற்று முதல் முறையாக திமுக தரப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. முதல் கட்டமாக திமுகவும், காங்கிரஸும் சந்தித்துப் பேசின.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், சுதர்சனம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட விரும்புகிறது, என்னென்ன தொகுதிகளை விரும்புகிறது என்ற விருப்ப பட்டியல் திமுகவிடம் அப்போது ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எங்கள் அணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது.
அதைப்போலவே, 2009-ம் ஆண்டு தேர்தலிலும் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் அணி செயல்பட உரிய வழிவகைகளை விவாதித்தோம்.
மேலும் கட்சிகள் சேரும்..
மேலும், ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை எங்கள் அணியில் இணைத்து ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியை தமிழகத்தில் மீண்டும் நாங்கள் அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மீண்டும் அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
தேமுதிக வருமா..?
தேமுதிக திமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்கையில், அது இனி தான் தெரியும். பல கட்சிகளை நாங்கள் அழைத்திருக்கிறோம். பல கட்சிகள் எங்களை அணுகியிருக்கின்றன என்றார்.
கடந்த முறையை விட (16) இந்த முறை கூடுதல் தொகுதிகளில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு அதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார் ஸ்டாலின்.
பாமக கூட்டணியில் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். நீங்கள் பிரித்து விடாதீர்கள் என்றார்.