வேலூரில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்!
வேலூர்: வேலூரில் நீதி மன்றத்திற்கு சென்ற திமுக வழக்கறிஞர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி வேலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்றும் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.
இந்த நிலையில் திமுக வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்திற்கு சென்றனர். அப்போது, அவர்களுடன் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும் உடன் சென்றனர்.
அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. பின்பு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தங்களுடன் வழக்கு தொடர்பாக வந்த சுந்தரமூர்த்தி என்பவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மோகன் குமார், கார்த்திகேயன் ஆகியோர் தாக்கியதாக மாவட்ட முதன்மை நீதிபதி கலைராசனிடம் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் பொன் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது.
அதில் திமுக வழக்கறிஞர்கள் முகமதுசகி, அக்பர் பாஷா, பார்த்திபன், அரசு வழக்கறிஞர்கள் பாண்டியன், ரவிக்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் பார்த்திபன், எம்.ஸ்ரீதர், ரவிச்சந்திரன், கே.சம்பத், கே.மணி, நடன சிகாமணி ஆகிய திமுக வழக்கறிஞர்களை வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நீக்குவதாக பொன் தேவராஜன் அறிவித்தார்.