கருணாநிதியிடம் நலம் விசாரித்த பிரதமர் மன்மோகன்
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 11ம் தேதி முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் அவரிடம் விசாரித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
பிரதமர் மன்மோகன் சிங், முதல்வரின் உடல்நிலை குறித்து விவரமாக கேட்டறிந்தார். முதல்வர் விரைவில் உடல்நலம் பெற்று பணிக்கு திரும்ப வாழ்த்தினார். இந்த நாட்டுக்கு முதல்வரின் தலைமை இன்னும் பல்லாண்டுகளுக்கு தேவை என்றும் முதல்வரிடம் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்ததோடு சமீபத்தில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவரது உடல்நிலை குறித்தும் அவர் எந்த அளவுக்கு நலம் பெற்று வருகிறார் என்பது குறித்தும் விசாரித்தார்.
அதற்கு பிரதமர், இப்போது தான் நன்றாக இருப்பதாகவும் அலுவலக பணிகளைக் கவனிக்க தொடங்கி விட்டதாகவும் முதல்வரிடம் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.