2009-உலக பொருளாதாரத்துக்கு போதாத காலம்!
லண்டன்: 2009-ம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்துக்கு பேராபத்தான ('a very dangerous year') ஆண்டாக இருக்கும் என்கிறது உலக வங்கி.
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜியோல்லிக் நேற்று கூறுகையில், 'இந்த ஆண்டைப் போல ஒரு மோசமான ஆண்டை இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு 2009-ம் ஆண்டு இருக்கப் போகிறது. இந்த நிலையை மாற்ற ஜி 20 நாடுகள் ஐஎம்எப்புக்கு கூடுதல் நிதியை அளிக்க வேண்டும். அதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியுள்ளன. இந்த மோசமான சூழலிலும் இது ஒரு ஆறுதலாகவே தெரிகிறது", என்றார்.
ஜி 20 அமைப்பில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற ஏழு பலம் மிக்க நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊக்கச் சலுகைகள் அளிப்பதா இல்லையா என்பது குறித்து சமீபத்தில் இந்நாடுகளின் நிதித் துறை அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். இதில் பலர் நிதிச் சலுகை அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்றும் ஜி-20 நிதி அமைச்சர்களின் கூட்டம் நடக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையிலேயே ஏப்ரல் 2-ம் தேதி நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இந்தக் கூட்டத்தின் முடிவுதான் உலகப் பொருளாதாரத்தின் மோசமான சரிவை ஓரளவாவது தடுக்கும் சக்தி மிக்கது என்று உலக வங்கித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications