லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: மாயாவதி
3வது அணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிலையில் இன்று இரவு அவர் 3வது அணித் தலைவர்களை இரவு விருந்துக்கு அழைத்துள்ளார். அப்போது தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று முற்பகல் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாயாவதி. அப்போது லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை. அமைக்கவும் மாட்டோம்.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்று சக்தியாக பகுஜன் சமாஜ் கட்சி திகழ்கிறது. லோக்சபா தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த பலத்தைக் கொண்டு சந்திக்கும்.
கடந்த 61 ஆண்டுகளாக ஏழை மக்களின் உயர்வுக்கு காங்கிரஸோ, பாஜகவோ எதையும் செய்யவில்லை. அவர்கள் பணக்காரர்களுக்கான கட்சிகளாகவே உள்ளன.
காங்கிரஸ் மற்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. அதைத் தடுக்க வேண்டும். அதற்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு இடதுசாரிகள் உறுதுணையாக இருப்பார்கள்.
இன்று நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில், பிரதமர் வேட்பாளர் குறித்து நான் பேசப் போவதில்லை. தேர்தல் உத்திகள் குறித்து மட்டுமே ஆலோசிப்பேன் என்றார் மாயாவதி.
3வது அணி தலைவர்களுக்கு மாயாவதி விருந்து
இதற்கிடையே இன்று 3வது அணித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டத்திற்குப் பின்னர் இரவு விருந்தளித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் மாயாவதி.
சமீபத்தில் பெங்களூரில் நான்காவது முறையாக உருவாக்கப்பட்டுள்ள 3வது அணியின் துவக்க விழா நடந்தது. இதையடுத்து அவர்கள் இன்று டெல்லியில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இக்கூட்டம் டெல்லி சிபிஎம் தலைமையகதத்தில் நடக்க இருக்கிறது.
இதன்பின்னர் மூன்றாவது அணி தலைவர்கள் உபி முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை சந்தித்து பேசவிருக்கின்றனர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மிஸ்ரா கூறுகையில், எங்கள் கட்சியினர் மாயாவதி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர்.
இருந்தாலும் யார் பிரதம வேட்பாளர் என்பது தேர்தலுக்கு பின்னர்தான் அறிவிக்கப்படும். இன்று எங்கள் கட்சி நிறுவனர் கன்ஷிராமின் பிறந்தநாள் என்பதால் மூன்றாவது அணி தலைவர்களுக்கு விருந்து அளிக்கவிருக்கிறோம் என்றார் அவர்.