செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்க 10 புதிய பெட்டிகள் நெல்லை வருகை
நெல்லை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படுவதற்காக புதிதாக 10 ரயில் பெட்டிகள் நெல்லை வந்துள்ளன.
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த மாதம் 8ம் தேதி அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் இயக்கி வைத்தார்.
வாரத்திற்கு ஒருமுறை வியாழக்கிழமை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், நெல்லை வழியாக சென்னை வரை சென்று மறுநாள் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனிக்கிழமை அங்கிருந்து திரும்பி வருகிறது.
இந்த வாராந்திர எஸ்க்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வாரத்தில் 5 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் திருச்செந்தூர் சென்னை வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்தில் 5 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைக்க நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மாலை 10 புதிய ரயில் பெட்டிகள் வந்தன. இன்னும் சில நாட்களில் மேலும் 20 புதிய பெட்டிகள் வர இருக்கிறது.
வரும் 19ம் தேதி முதல் திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.