கடலோரப் பாதுகாப்புக்காக 40 புதிய சோதனைச் சாவடிகள்
தூத்துக்குடி: தமிழக கடலோரப் பகுதி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக 40 புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி ராஜேஷ்தாஸ் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.
தருவைகுளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும பாதுகாப்பு நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு எஸ்பி தீபக் டமோர், கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி மணிரத்னம் ஆகியோருடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தருவைகுளத்தில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விடவும் அதிகமாக ரோந்து பணியும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் தங்கள் பகுதிக்கு புதிதாக யாராவது அன்னியர் வந்தால் கூட அவர்களுக்கு தெரிந்துவிடும்.
கடலோர காவல் நிலையங்களுக்கு அதிநவீன தொலைதொடர்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளுடன் கூடிய பையுடன் கோல்டன் என்ற இரண்டு படகுகள் கொல்கத்தாவில் தயாராகி வருகின்றன. அங்கிருந்து இன்னும் சில மாதங்களுக்குள் வந்துவிடும்.
தமிழக கடற்கரையோர பகுதிகளில் தற்போது 60 செக் போஸ்ட்கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 40 இடங்களில் செக் போஸ்ட்கள் அமைக்கப்படும்.
கடல் வழியாக அன்னியர் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு ரோந்து பணி மற்றும் வனத்துறையினருடன் கூட்டு ரோந்து ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது போல 14 விசைப்படகுகள் ஓப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இந்த படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.